கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாய்ங்க!!!
இல்ல இல்ல...
கிளம்பிட்டேன்யா கிளம்பிட்டேன்!!!
*************
கீழ் உள்ள தொடர்களை வாய்விட்டுப் படியுங்கள். இல்ல இல்ல...
கிளம்பிட்டேன்யா கிளம்பிட்டேன்!!!
*************
பதிவர் கூட்டத்திற்குச் சென்றேன்.
தாமிராவைக் (ஆதிமூலகிருஷ்ணனைக்) கண்டேன்.
பேசிப் பார்த்தேன்.
கலைஞர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
கலைஞர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
கலைஞர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
இவற்றைப் படிக்கும்பொழுது தொடர்களின் இடையில் 'ச்', 'க்', 'ப்', 'த்' என்னும் எழுத்துகள் அமைந்து இயல்பாக ஒலிப்பதை அறிவீர்கள். இவ்வாறன்றி, 'கூட்டத்திற்கு சென்றேன்', 'தாமிராவை கண்டேன்'. 'பேசி பார்த்தேன்', 'உண்ணாவிரதத்தை தொடங்கினார்' எனப் படிக்கும்போது இயல்பான ஒலியமைப்பு இல்லை என்பதை அறியலாம்.
நிலைமொழிகளோடு 'க, ச, த, ப' வருக்கத்தில் தொடங்கும் வருமொழிகள் அமையும்பொழுது 'க், ச், த், ப்' மிகும் இடங்களை அறிந்து அவை என்னென்ன இடங்கள் எனக் கூறியுள்ளார்கள் நம் இலக்கணத்தில். அவ்வாறு அறியாது பயன்படுத்தினால் பொருள் வேறுபாடு ஏற்படும்.
எ-டு 1: 'நாடி துடிக்கிறது' என்னும்பொழுது 'ஒருவனது கை நாடி துடிக்கிறது' என்று பொருள்.
'நாடித் துடிக்கிறது' என்னும்பொழுது 'ஒருவரை நாடித்(விரும்பி) துடிக்கிறது' என்று பொருள்படும்.
எ-டு 2: 'இது ஒரு தந்தப்பெட்டி'
'நண்பர் எனக்குத் தந்த பெட்டி'
'தந்தப் பெட்டி' என்னும்பொழுது 'தந்தத்தால் ஆனப்பெட்டி' எனவும்,
'தந்த பெட்டி' என்னும்பொழுது 'கொடுத்த பெட்டி' எனவும் பொருள்படுகிறது.
எனவே வல்லினம் மிகும் இடம், மிகா இடம் அறிதல் வேண்டும்.
கீழே வல்லினம் மிகும் இடங்கள் சிலவும் வல்லினம் மிகா இடங்கள் சிலவும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் சந்திப் பிழைகளைத் தவிர்க்கலாம்.
வலிமிகும் இடஙகள்:
1. அப்படி, இப்படி என்னும் சொற்களின் பின் வலிமிகும்.
அப்படி + கூறினான் = அப்படிக் கூறினான்.
இப்படி + சொன்னார் = இப்படிச் சொன்னார்.
2. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வலிமிகும்.
நன்றாய் + பேசினார் = நன்றாய்ப் பேசினார்.
3. அங்கு, இங்கு என்னும் சுட்டுத் திரிபுப் பெயர்களின் பின் வலிமிகும்.
அங்கு + கண்டேன் = அங்குக் கண்டேன்.
இங்கு + பார்த்தேன் = இங்குப் பார்த்தேன்.
4. இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின்வரும் வலி மிகும்.
பையை + கொடு = பையைக் கொடு.
5. நான்காம் வேற்றுமை உருபிற்கும் பின்வரும் வலிமிகும்.
சென்னைக்கு + சென்றான் = சென்னைக்குச் சென்றான்.
6. ஓரெழுத்து ஒருமொழியின் பின் வலிமிகும்.
தை + திங்கள் = தைத் திங்கள்
தீ + பற்றியது = தீப் பற்றியது
வலிமிகா இடங்கள்:
1. எழுவாய்த் தொடரில் வலிமிகாது.
குரங்கு + கடித்தது = குரங்கு கடித்தது.
2. வினைத் தொகையில் வலிமிகாது.
விளை + பயிர் = விளைபயிர்
3. உம்மைத் தொகையில் வலிமிகாது.
செடி + கொடி = செடிகொடி
4. அடுக்குத் தொடரில் வலிமிகாது.
தீ + தீ = தீ தீ
5. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலிமிகாது.
நீர் + குடித்தான் = நீர் குடித்தான்.
பயிற்சி:
'நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா'.
மேலுள்ள வாக்கியத்தை சந்திப் பிழையின்றி பின்னூட்டத்தில் எழுதுக. :)
************************
என்னமோ எல்லாரும் எழுதுறாங்க, நாமளும் ஒரு பெரிய சிந்தனையாளராகிட்டோம்ல(அடங்கொக்க மக்கா), அதனால எழுதுவோம் - என்று ஒரு எண்ணத்தில்தான் எழுத வந்தேன். எழுதுறது சரி, பிழையில்லாமல் எழுதுகிறாயா? என்று 'நானே கேள்வி' கேட்டபோது... 'நாம எல்லாம் யாரு? பச்சைத் தமிழன். நம்ம எழுத்துலயாவது, பிழையாவது' என்ற மமதையுடன் 'நானே பதில்' சொல்லிக்கொண்டேன்.
ஆனால் கடந்த முறை ஊருக்குச் சென்ற போது 8-வகுப்பு தேர்வுக்காக புத்தகத்துடன் முட்டி மோதிக் கொண்டிருந்த சிறுமியின் கையிலிருந்த மேற்கண்ட இலக்கணங்களை கண்டபோது....
'அடங்கொண்ணியா, ஒத்தை எழுத்துக்கே இத்தனை இலக்கணமா?!'
என்று கலக்கம் ஏற்பட்டுவிட்டது.
************************
பிடிச்சிருந்தா தமிழ்மணத்துல கையை உயர்த்திப் பிடியுங்கள் இங்கே!.
பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்து கொஞ்சமா மாத்திப் போட்டதுதாங்க இது.
நீங்களும் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமா? வாருங்கள். ஆன்லைன் பாடப்புத்தகங்கள் இங்கே.